'வரவுசெலவுத் திட்டத்தில் மாற்றம் செய்யாவிடில் ஆதரிப்பது சந்தேகம்தான்'
கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அடுத்த ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்யாவிடில் அதனை நிறைவேற்ற தாங்கள் ஆதரவளிக்காமல் போகலாம் என்று எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன.
"வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்ற நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். அப்படிச் செய்யாதிருந்து பொதுமக்களை, முன்களப் பணியாளர்களை அல்லது பொதுச் சேவை அதிகாரிகளைச் சிரமத்திற்கு உட்படுத்த நாங்கள் விரும்பவில்லை.
"ஆனால், வரவுசெலவுத் திட்டத்தில் திருத்தம் செய்யாவிடில், அது எளிதில் நிறைவேற்றப்படும் என நினைத்துவிட வேண்டாம்," என்று எதிர்க்கட்சித் தலைவரும் கெஅடிலான் கட்சித் தலைவருமான அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார்.
வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால நீட்டிப்புத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பக்கத்தான் ஹரப்பான் எதிர்க்கட்சிக் கூட்டணியின் ஆறு கோரிக்கைகள் குறித்து வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் எதுவும் இடம்பெறவில்லை என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்று சார்ந்த பிரச்சினைகளைச் சமாளிக்க நிதி அமைச்சர் ஸஃப்ருல் அஸிஸ் எல்லாப் பரிந்துரைகளையும் ஆராய வேண்டும் என்று திரு அன்வார் வலியுறுத்தி இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் குறித்த விவாதம் நேற்று தொடங்கியது. ஓர் அமர்வில் அதிகபட்சம் 80 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். அத்துடன், காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை என ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே மன்றம் கூடும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான 'பெரிக்கத்தான் நேஷனல்' கூட்டணி அரசாங்கம் தாக்கல் செய்த முதல் வரவுசெலவுத் திட்டம் இது. மொத்தம் 222 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பிரதமர் முகைதீனுக்கு 113 எம்.பி.க்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது.
இதனால், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் திடீர் தேர்தலுக்கான அபாயத்தைத் தவிர்க்கலாம் என அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
வரவுசெலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இம்மாதம் 25ஆம் தேதி இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் சேர்ந்து, அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அம்னோ கட்சி, வரவுசெலவுத் திட்டத்திற்கான தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுவும் வரவுசெலவுத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

