மாஸ்கோ: ரஷ்ய இராணுவ வீரர் ஒருவர் தன்னுடன் பணிபுரிந்த மூவரைச் சுட்டுக்கொன்றுவிட்டார். வொரோனெஸ் நகருக்கு அருகே உள்ள இராணுவத் தளத்தில் நேற்று இச்சம்பவம் நிகழ்ந்தது.
சோதனை நடவடிக்கையின்போது அந்த இராணுவ வீரருக்கும் அதிகாரி ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவ்வீரர், அந்த அதிகாரியின் கைத்துப்பாக்கியைப் பறித்து, மூவரைச் சுட்டுக்கொன்றதாக ரஷ்ய ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த வெறிச்செயலில் ஈடுபட்டபின் அந்த வீரர் ஒரு கட்டடத்தினுள் இருந்தபடி பூட்டிக்கொண்டதால் இராணுவத் தள அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ரஷ்ய இராணுவத் தளங்களில் துப்பாக்கிச்சூடு இடம்பெறுவது புதிதில்லை எனக் கூறும் மனித உரிமைக் குழுக்கள், ஆனாலும் அண்மைக்காலமாக அப்போக்கு அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தது.
2019 அக்டோபரில், சைபீரிய இராணுவத் தளத்தைச் சேர்ந்த ஒருவர் சக வீரர்கள் எட்டுப் பேரைச் சுட்டுக்கொன்றுவிட்டார்.

