உலகச் சுகாதார நிறுவனம் இவ்வார இறுதியில் மெய்நிகர் முறையில் முக்கியமானதொரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. கொவிட்-19 நோய்ப் பரவல் அக்கூட்டத்தின் மைய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அக்கூட்டத்தில் பங்கேற்கும்படி தைவானுக்கு இன்னும் அழைப்பு வரவில்லை. இது குறித்து மனக்குறை தெரிவித்துள்ள தைவான், சீனாவின் குறுக்கீடுதான் இதற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியிருக்கிறது.
"உலகச் சுகாதார நிறுவனக் கூட்டங்களில் பங்கேற்க முடியாதபடி சீனா தடுத்து வருவதற்கு வருத்தத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துக்கொள்கிறோம். 23.5 மில்லியன் தைவானியர்களின் சுகாதாரத்தையும் மனித உரிமைகளையும் உலகச் சுகாதார நிறுவனம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது," என்று தைவான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இப்படி அரசியல் காரணங்களின் அடிப்படையில் தைவானுக்கு அழைப்பு விடுக்க உலக நிறுவனம் மறுத்து வருவது, 'அனைவருக்கும் சுகாதாரம்' என்ற அதன் கோரிக்கையை கேலிக்குரியதாக்கும் விதமாக இருக்கிறது என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஆனால், தைவானுக்கு அழைப்பு விடுப்பது என்பது சக உறுப்பு நாடுகள் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு என்று உலக நிறுவனம் விளக்கமளித்துள்ளது. கொவிட்-19 தொற்றை விரைந்து கட்டுப்படுத்தியமைக்காக தைவானைப் பல நாடுகளும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

