அமெரிக்கத் தேர்தல் இன்னும் முடியவில்லை என்று திரு டோனல்ட் டிரம்ப்பின் தரப்பு கூறுகிறது. தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது.
இதன் காரணமாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க திரு டிரம்ப்புக்கு எல்லா உரிமைகளும் இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கேலி மெக்எனேனி தெரிவித்தார்.
சட்ட ரீதியான போராட்டம் தொடங்கிவிட்டதாகவும் இப்போதுதான் நேர்மையான, உண்மையான வாக்கு எண்ணிக்கையைப் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தலில் மோசடி நிகழ்ந்திருப்பதாக அவர் அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஆனால் தேர்தல் முடிவைப் பாதிக்கக்கூடிய நடவடிக்கை நிகழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பெரும்பாலான இடங்களில் திரு ஜோ பைடன் வெற்றி பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தேர்தலின் முடிவு குறித்து அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிட்ட திரு டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.
தேர்தல் முடிவு ஏற்க முடியாத ஒன்று என்றும் தமக்கு எதிராக மோசடி நிகழ்ந்திருக்கிறது என்றும் திரு டிரம்ப் நேற்று முன்தினம் டுவிட்டரில் பதிவிட்டார்.
தேர்தல் முடிவு குறித்து திரு டிரம்ப் அதிருப்தி அடைந்துள்ளபோதிலும் வரும் ஜனவரி மாதத்தில் அவர் வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க ஊடகம் தெரிவித்தது.
2024ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக திரு டிரம்ப் கூறியிருப்பதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, குடியரசுக் கட்சியைத் தமது கட்டுக்குள் வைத்திருக்க தலைமைத்துவ அரசியல் நடவடிக்கைக் குழு எனும் நிதி திரட்டும் அமைப்பு ஒன்றை திரு டிரம்ப் தொடங்கியுள்ளார்.
ஆண்டுக்கு ஒருமுறை நன்கொடையாளர் ஒருவரிடமிருந்து 5,000 அமெரிக்க டாலர் வரை நன்கொடை பெற முடியும். ஆனால் நன்கொடையாளர்களின் எண்ணிக்கைக்கு வரம்பில்லை.
மேலும், மற்ற அரசியல் நடவடிக்கை குழுக்களிடமிருந்தும் நன்கொடை பெறலாம்.
இது ஒருபுறம் இருக்க, தேர்தலில் தமது வெற்றியை அடையாளம் காண தாமதம் ஏற்பட்டுள்ளதால் அதை எதிர்த்து வழக்கு தொடுக்க பைடன் முகாம் பரிசீலனை செய்து வருகிறது.

