கொவிட்-19 மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு சொந்த ஊரான பேராக் மாநிலத்தில் உள்ள பிடோருக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்த மலேசிய ஆடவர் வடக்கு தெற்கு விரைவுச்சாலையில் போலிஸ் சோதனைச்சாவடியைப் பார்த்ததும் காரை எதிர்திசையில் ஓட்டினார்.
போலிசாரின் கண்களில் படாமல் இருக்க அவர் கிட்டத்தட்ட 1.4 கிலோமீட்டர் தூரத்துக்கு எதிர்திசையில் ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவாக விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வழியாக வந்துகொண்டிருந்த காரின் மீது அந்த ஆடவரின் கார் மோதியது. கனரக வாகனம் ஒன்றும் விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய மற்றொரு காரின் ஓட்டுநருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன. விபத்தை விளைவித்தவரும் கனரக வாகன ஓட்டுநரும் காயங்களின்றி தப்பினர்.
எதிர்திசையில் காரை ஓட்டி விபத்து விளைவித்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

