கொரோனா கிருமி பரவாமல் இருக்க மிகக் கடுமையான முடக்கநிலையை மலேசியா நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்கு அருகில் உள்ள வட்டாரத்திலிருந்து தப்பி ஓடிய 400 குடியிருப்பாளர்களை அந்நாட்டு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
சிலாங்கூர் மாநிலம், செபாங் மாவட்டத்தில் உள்ள சலாக் திங்கியில் உள்ள மேடான் 88 குடியிருப்பு வட்டாரத்தின் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு மேலும் கடுமையாக்கப்படும் என்று பல நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் அறிவித்தனர்.
அதன்படி அந்தக் குடியிருப்பு வட்டாரத்தைவிட்டு யாரும் வெளியேற முடியாதபடியும் பிறர் அங்கு செல்வதைத் தடுக்கவும் அவ்வட்டாரத்தைச் சுற்றி முள் வேலி போடப்பட்டுள்ளது. அதையடுத்து, ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். குடியிருப்பாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் அதிகாரிகள் அனுப்பி வைக்கின்றனர்.
ஆனால் முடக்கநிலைக்கு முன்பாக மேடான் 88 வட்டாரத்தில் வசித்த நூற்றுக்கணக்கான ஊழியர்களை அவர்களது முதலாளிகள் பேருந்துகளில் ஏற்றி அங்கிருந்து வெளியேற்றிவிட்டதாக மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
தப்பி ஓடியோடிய ஊழியர்களை போலிசார் தேடி வருவதாகவும் அவர்கள் கூடிய விரைவில் கைது செய்யப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
"மேடான் 88 வட்டாரத்திலிருந்து தங்கள் ஊழியர்கள் வெளியேற அவர்களது முதலாளிகள் பேருந்துகளை அனுப்பிவைத்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது. எனவே, முதலாளிகள் மூலம் ஊழியர்களின் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ளலாம்," என்று திரு இஸ்மாயில் சப்ரி தெரிவித்ததாக மலேசிய ஊடகம் தெரிவித்தது.
"தப்பி ஓடிய ஊழியர்களுக்கு எதிராக மட்டுமின்றி அவர்கள் தப்பி ஓட உதவிய அவர்களது முதலாளிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க தேசிய பாதுகாப்பு மன்றம் முடிவெடுத்துள்ளது. அவர்கள் அதிகாரிகளுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், பல உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளனர்," என்றார் திரு இஸ்மாயில் சப்ரி.
கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கடந்த 14 நாட்களில் மேடான் 88 வட்டாரத்தில் 40 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அந்த வட்டாரத்தில் இன்னும் ஒருவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டால் அது சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படும் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது சிலாங்கூர் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் நிபந்தனையுடனான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நடப்பில் உள்ளது. இதன்படி, அங்கிருப்பவர்கள் பிற மாநிலங்களுக்குப் பயணம் செய்யக்
கூடாது. பிரதான சாலைகளில் போலிசார் தடுப்புகளை அமைத்துள்ளனர். மேலும் பலர் ஒன்று கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நடப்பில் உள்ள இடங்களில் குடியிருப்பாளர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர். அவர்கள் வெளியே செல்ல முடியாது. நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட இடங்களில் வேலை, வருமான இழப்பு குறித்து குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.

