வாஷிங்டன்: அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அரிசோனா மாநிலத்தையும் அவர் கைப்பற்றியுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் தேர்தலில் மோசடி நடந்துள்ளது என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து, தேர்தல் வெற்றியாளர் தொடர்பாக அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், திரு பைடன் தலைமையிலான இடைக்கால அரசை ஏற்க டிரம்ப் மறுத்துவிட்டார்.
திரு பைடனின் இடைக்கால அரசு அரசாங்க அலுவலகங்களுக்குச் செல்லவும் அரசுப் பணிகளைக் கவனிக்கவும் திரு டிரம்ப் அனுமதிக்கவில்லை. பல நாட்களாக அரசுப் பணிகள் கவனிக்கப்படாததால் நாட்டின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்று குரல்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் சிலரும் அவருக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
குறைந்தபட்சமாக நாட்டு நடப்பு, உளவுத்துறைத் தகவல்கள் ஆகியவை பற்றி திரு பைடனுக்கு அன்றாடம் தெரிவிக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பல செனடர்கள் வலியுறுத்துகின்றனர்.
அப்போதுதான் பயங்கரவாதம், இணைய ஊடுருவல் போன்ற ஆபத்துகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
"திரு பைடனின் குழுவிடம் எல்லாவற்றையும் தெரிவிக்கத் தேவையில்லை. சில முக்கிய தகவல்களை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அவற்றில் தேசிய பாதுகாப்பும் ஒன்று," என்று மிசூரியின் செனடரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான திரு ரோய் பிளண்ட் கூறினார். இதற்கிடையே, சீன ராணுவத்துக்குச் சொந்தமான அல்லது கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார்.
நேற்று முன்தினம் இதுதொடர்பாக சிறப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவு சீனாவின் சில பெரிய நிறுவனங்களைப் பாதிக்கக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்தப் புதிய விதிமுறை வரும் ஜனவரி மாதம் 11ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வருகிறது.
சீனாவின் ராணுவத்துக்குச் சொந்தமான நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டு 60 நாட்களானதும் அந்த நிறுவனத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனங்கள் வாங்கவோ விற்கவோ முடியாது.
"சீனா அதன் ராணுவத்தை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் அமெரிக்காவின் நிதியைத் தவறான முறையில் பயன்படுத்துகிறது," என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
இந்நிலையில், அமெரிக்கத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய திரு பைடனுக்கு போப்பாண்டவர் தொலைபேசி அழைப்பு மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

