கோலாலம்பூர்: குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட நஜிப் ரசாக்கின் ஆலோசனைகளை மலேசிய அரசாங்கம் புறக்கணிக்க வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். நஜிப்புக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் ஒரு குற்றவாளி என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
நஜிப்பை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிப்பது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்றார் அவர்.
"குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் நாடாளுமன்றத்துக்குச் சென்று அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் கொடுமை எந்த நாட்டிலும் நிகழாது. மலேசியாவில் அவ்வாறு நடந்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது," என்று 'தி மலேசியன் இன்சைட்' செய்தி நிறுவனத்திடம் தமது அதிருப்தியைத் நேற்று தெரிவித்தார் டாக்டர் மகாதீர்.
"மலேசியாவில் மட்டும் இதுபோன்றவை நடக்கும். குற்றவாளிகள் அரசாங்க ஆலோசகர்களாக இருப்பதை எண்ணி நாங்கள் பெருமை அடையலாம். அரசாங்கத்தின் கையாளாகாத நிலையை இது காட்டுகிறது. குற்றவாளி ஒருவர் அரசாங்கத்தைச் சாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மலேசியாவின் நாடாளுமன்றத்துக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது," என்றார் டாக்டர் மகாதீர்.
1எம்டிபி ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு மட்டும் நஜிப்புக்கு நேரம் இருக்கிறதா என்று டாக்டர் மகாதீர் கேள்வி எழுப்பினார்.
"நஜிப்புக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் நிறுத்தப்பட்டிருப்பது மிகவும் விசித்திரமாக உள்ளது. ஆனால் நாடாளுமன்றத்தில் உரையாற்ற அவருக்கு நேரம் இருக்கிறது," என்று டாக்டர் மகாதீர் தெரிவித்ததாக 'ஃப்ரீ மலேசியா டுடே' இணையச் செய்தி சேவை தெரிவித்தது.
கடந்த ஜூலை மாதத்தில் 1எம்டிபி ஊழல் தொடர்பான முதல் வழக்கில் நஜிப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து நஜிப் மேல்முறையீடு செய்துள்ளார்.
அவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட மற்ற வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பெக்கான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பதவி வகிக்கும் நஜிப், தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய முன்னணியைச் சேர்ந்த 42 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 39 பேர் அம்னோவைச் சேர்ந்தவர்கள்.
கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி 1எம்டிபி அமைப்புக்கு ஏறத்தாழ 32.3 பில்லியன் ரிங்கிட் கடன் பாக்கி இருப்பதாக மலேசிய அரசாங்கம் கூறியது.

