ஈப்போ: தீபாவளி பண்டிகைக்காக வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்த போது, சிறுமி ஒருவர் கையில் வைத்திருந்த கத்தி தவறுதலாக குத்தியதில் 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துவிட்டான்.
மலேசியாவின் ஈப்போவில் தீபாவளிக்கு முதல் நாளன்று நடந்த இச்சம்பவம் அக்குடும்பத்தை மட்டுமல்லாமல் அக்கம்பக்கத்தினரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது.
இந்த பரிதாப சம்பவம் தீபாவளிக்கு முதல் நாளன்று இரவு மணி 10.20 அளவில் சித்தியவான் தாமான் செம்பாகா கம்போங் கோவிலுள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்ததாக 'மலாய் மெயில்' செய்தி கூறுகிறது.
ஜெயசுதா வின்னேசன் தீபாவளிக்காக தமது வீட்டை அலங்கரித்துக்கொண்டிருந்தார்.
அப்போது கயிற்றை வெட்டுவதற்காக தமது 11 வயது மகளான மதுரிஷாவிடம் கத்தியை எடுத்து வரும்படி ஜெயசுதா கூறியுள்
ளார்.
மதுரிஷாவும் கத்தியை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அண்டைவீட்டில் வசிக்கும் ஆதித்தியன் சிறுமியிடம் வேகமாக ஓடி வந்தபோது, அவள் மீது மோதியதால், அவளது கையிலிருந்த கத்தி தவறுதலாக சிறுவனின் நெஞ்சில் குத்திவிட்டதாக உறவினர் ஒருவர் கூறினார்.
"இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான நாங்கள் அனைவரும் உடனடியாக ஆதித்தியனை ஸ்ரீ மஞ்சோங் மருத்துவ
மனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குச் கொண்டுச் சென்றோம்," என்றார் சிறுவனின் உறவினர் ஒருவர்.
அங்கு ஆதித்தியனைப் பரிசோதனை செய்த மருத்துவர் அவன் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தியதாக உறவினர்கள் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயசுதா போலிசில் புகார் செய்துள்ளார்.
இதனிடையே மருத்துவ பரிசோதனைக்காக ஆதித்தியனின் உடல் ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய மஞ்சோங் மாவட்ட போலிஸ் தலைவர் துணை ஆணையர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகச் சொன்னார்.

