ஆஸ்திரேலியா, கிருமி தொற்றிலிருந்து முழுமையாக விடுபடுவதற்கு முன்பாகவே தெற்கு ஆஸ்திரேலியாவில் கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. இதனால் அம்மாநிலம் முழு விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் கிருமித்தொற்று பரவிய பிறகு முதல் முறையாக தற்போது 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடிலெய்டில் உள்ள தனிமைப்படுத்தும் இடமான ஹோட்டலில் உள்ள ஊழியர் ஒருவர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் மூலமாக உள்ளூரில் வசிக்கும் குடும்பம் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இதனால் மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கடைகள் மூடப்பட்டன.
கிருமிப்பரவிய தொடர்பு தடங்களைக் கண்டறியும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு கிருமித்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட விக்டோரியா மாநிலம், அதிலிருந்து விடுபடுவதற்குக் கடுமையாக போராடியது.
கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியா அதன் எல்லைகளை அனைத்துலகப் பயணிகளுக்கு மூடியது.
ஆனால் ஹோட்டலில் கட்டாய 14 நாள் தனிமையை மேற்கொண்டால் ஆஸ்திரேலிய குடிமகன்களும் நிரந்தரவாசிகளும் நாடு திரும்பலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.


