பேங்காக்: அண்மைக் காலமாக தாய்லாந்துப் பிரதமருக்கும் மன்னரின் அதிகாரத்துக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. நாளுக்கு நாள் மோசமாகி வரும் ஆர்ப்பாட்டங்கள் அன்றாட வாழ்க்கையை முடக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், தாய்லாந்து போலிஸ் தலைமையகத்தின் மீது நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டக்காரர்கள் சாயம், கண்ணாடி போத்தல்கள் ஆகியவற்றை வீசினர்.
தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கண்ணீர்ப் புகை வீசியும் அவர்களைக் கலைக்க போலிசார் முயன்றனர்.
இதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்காக அனைத்து சட்டங்களும் பயன்படுத்தப்படும் என்றும் தாய்லாந்துப் பிரதமர் பிராயுட் சான் ஓ சா நேற்று தெரிவித்தார்.
“நிலைமை மேம்படவில்லை. வன்முறை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் நாட்டுக்கும் மதிப்புக்குரிய மன்னருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும்.
“எனவே சட்டத்தை மீறிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் அதன் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும். அவர்களுக்கு எதிராக அனைத்து சட்டங்களும் பயன்படுத்தப்படும்,” என்றார் திரு பிராயுட்.
மன்னரை மரியாதைக் குறைவாகப் பேசுவோருக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் சட்டமும் இதில் அடங்குமா என்பது குறித்து அவர் விவரிக்கவில்லை.
மன்னர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தச் சட்டத்தை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இதுவரை பயன்படுத்தவில்லை என்று திரு பிராயுட் அண்மையில் கூறியிருந்தார்.