குறைந்தது 39 அப்பாவி ஆப்கானியர்களையும் கைதிகளையும் தமது சிறப்புப் படையினர் கொன்றது தொடர்பாக நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக ஆஸ்திரேலியாவின் ராணுவ உயர் அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர்களுக்கு எதிராகப் போர்க் குற்ற வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் அரசாங்க வழக்கறிஞர்களைக் கேட்டுக்கொண்டார்.
“வீரர்கள் சிலர் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டனர். விதிமுறைகள் மீறப்பட்டன. உண்மையை மறைக்க கதைகள் பின்னப்பட்டன. கைதிகள் கொலை செய்யப்பட்டனர்,” என்று ஆஸ்திரேலியாவின் தற்காப்புப் படைத் தலைவர் எங்கஸ் கெம்பல் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியப் படைகள் அத்துமீறி நடந்து அங்குள்ள மக்களைக் கொடுமைப்படுத்தியதாக பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திகள் வெளிவந்தன. 2005க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அப்பாவி ஆடவர்களையும் சிறுவர்களையும் ஆஸ்திரேலிய வீரர்கள் கொன்று குவித்ததாக ஆப்கான் ஊடகம் குற்றம் சாட்டியது.
இதுதொடர்பாக 2016ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா விசாரணையைத் தொடங்கியது. இந்நிலையில், வீரர்களின் குற்றம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அறியப்படுகிறது.