லண்டன் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஸெனிக்கா புதிய பரிசோதனையை நேற்று தொடங்கியது. கொவிட்-19 தொற்று அபாயம் உள்ளோருக்கு 12 மாதங்கள் வரை நீண்டகால எதிர்ப்பு சக்தியை தந்து முன்னரே காக்கக்கூடிய மருந்தின் பரிசோதனை அது.
AZD7442 எனப்படும் தடுப்பு மருந்தின் ஆற்றலையும் உடல்நலப் பாதுகாப்பையும் சோதித்து அறியக்கூடிய மூன்றாம் கட்ட அனைத்துலக பரிசோதனையில் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த 5,000 பேரை அந்நிறுவனம் ஈடுபடுத்தும். எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடிய இதர தடுப்பு ஊசிகளில் இருந்து இந்த மருந்து முற்றிலும் வேறுபடுவதாக அஸ்ட்ராஸெனிக்கா தெரிவித்துள்ளது.
தடுப்பூசி பயனளிக்காத, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக்கு இந்த மருந்து நல்ல பலனைத் தரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அது குறிப்பிட்டு உள்ளது.
இது தவிர, ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தனியாக கொவிட்-19 தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியிலும் அஸ்ட்ராஸெனிக்கா ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், BNT162b2 என்னும் தடுப்பூசியை உருவாக்கி உள்ள ஃபைஸர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் அதன் அவசரநிலை பயன்பாட்டுக்கு அனுமதி கோரி உள்ளன. இதுவரை சோதிக்கப்பட்டதில் தங்களது மருந்தால் உடல்நலப் பாதுகாப்புக்கு அபாயம் ஏற்படவில்லை என்றும் 95 விழுக்காடு தடுப்பாற்றலைக் கொண்டதாக உள்ளது என்றும் சில தினங்களுக்கு முன்னர் இந்நிறுவனங்கள் கூட்டாகத் தெரிவித்து இருந்தன.
இந்நிலையில், மருந்தின் அவசரநிலை பயன்பாட்டுக்கு அனுமதி கோரி அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகத் துறைக்கு விண்ணப்பித்து இருப்பதாக ஃபைஸர் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் போர்லா தமது நிறுவன இணையப்பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்தியாவின் ஹைதராபாத் நகரைத் தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவாக்ஸின் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளது. பரிசோதனைக் கூடங்களுக்கு அருகில் வசிப்போர் வரலாம் என்று கூறியுள்ள அந்நிறுவனம், 18 வயதுக்குக் கீழ் உள்ளோருக்கும் ஏற் கெனவே கொவிட்-19 கிருமி தொற்றியோருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.
கோவாக்ஸின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை இவ்வாரத் தொடக்கத்தில் பாரத் பயோடெக் தொடங்கியது. இந்தியாவில் நடத்தப்படும் ஆகப்பெரிய தடுப்பூசி பரிசோதனையாக அது கருதப்படுகிறது.

