மாடெர்னா நிறுவனம் தயாரிக்கும் கொவிட்-19 தடுப்பு மருந்தை அரசாங்கங்களுக்கு US$25 முதல் US$37 (S$33.60 முதல் S$49.70) வரையிலான விலையில் வழங்க இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீஃபர் பான்செல் ஜெர்மன் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
சளிக்காய்ச்சலுக்காக வழங்கப்படும் தடுப்பு மருந்தின் விலை பொதுவாக US$10 முதல் US$50க்கு உள்ளாக இருப்பதைக் குறிப்பிட்டு, கொவிட்-19 தடுப்பு மருந்தும் கிட்டத்தட்ட அந்த அளவுக்குள் இருப்பதை நிறுவனம் சுட்டிக் காட்டியது.
மில்லியன் கணக்கான டோஸ்களில் தடுப்பு மருந்தை US$25 என்ற விலையில் தருவது பற்றி மாடெர்னா நிறுவனத்துடன் ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் பேச்சுவார்த்தைகளை கடந்த திங்கட்கிழமை மேற்கொண்டது.
முடிவுகள் ஏதும் எட்டப்படாவிட்டாலும் ஒப்பந்தம் ஏற்படக்கூடிய சூழல் நிலவுவதாக திரு பான்செல் குறிப்பிட்டார். இவ்வாண்டு ஜூலை முதல் ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் மாடெர்னா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது பரிசோதனையில் இருக்கும் மாடெர்னா நிறுவன தடுப்பு மருந்து, கொவிட்-19 பரவலைத் தடுப்பதில் 94.5 விழுக்காடு திறனுடன் இருப்பதாக அதன் இறுதிக்கட்ட பரிசோதனை முடிவுகள் காட்டியதாகத் தெரிவித்தது.
ஃபைசர், அதன் பங்காளியான பையோஎன்டெக் நிறுவனம் ஆகியவை தயாரிக்கும் தடுப்பு மருந்துக்கு அடுத்தபடியாக மாடெர்னா தடுப்பு மருந்து திறம்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.