துபாயிலிருந்து நியூசிலாந்துக்கு சென்ற விமானத்தில் குறைந்தபட்சம் நால்வருக்கு கொரோனா கிருமி பரவியது தெரியவந்துள்ளது.
விமானப் பயணத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு கொவிட்-19 பரிசோதனை மேற்கொண்டபோது கிருமிப்பரவல் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவருக்கு, விமானத்தில் ஏறும்போது கிருமித்தொற்று அறிகுறிகள் இருந்ததாகக் கூறப்பட்டது. விமானப் பயணத்துக்கு 71 மணி நேரத்துக்குப் பிறகே அவருக்கு கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
விமானத்தில் இருந்து இறங்கி ஆக்லாந்தில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது மொத்தம் ஐவருக்கு கொவிட்-19 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் அனைவரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி அந்த விமானத்தில் பயணம் செய்த 86 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
18 மணி நேர விமானப் பயணத்தில் அனைவரும் தொடர்ந்து முகக்கவசம் அணிந்திருப்பது சிரமமான ஒன்றாக இருந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஐவரும் நான்கு வரிசைகளுக்குள் அமர்ந்திருந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விமானப் பயணத்தின்போது ஒருவரிடமிருந்து நால்வருக்கு Sars-CoV-2 பரவியிருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
Sars-CoV-2 கிருமி பரவி ஐந்து முதல் 6 நாட்களுக்குப் பிறகே கொவிட்-19 அறிகுறிகள் தென்படத் தொடங்கும் என்று குறிப்பிட்ட நிபுணர்கள், அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பே அவர்களிடமிருந்து கிருமி பரவக்கூடும் என்றனர்.