மாபெரும் தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு இரண்டு பில்லியன் தடுப்பூசிகள் ஏழை நாடுகளுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்படும் என்று ஐநாவின் சிறார் நல அமைப்பான யூனிசெஃப் தெரிவித்தது.
எல்லா நாடுகளுக்கும் நியாயமான முறையில் தடுப்பூசிகள் விநியோகிக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் தடுப்பூசிகளை விநியோகிப்பதற்காக 350 விமான மற்றும் சரக்கு நிறுவனங்களுடன் யூனிசெஃப் பேச்சு நடத்தி வருகிறது. புருண்டி, ஆப்கானிஸ்தான், ஏமன் போன்ற நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் ‘கோவாக்ஸ்’ உலகளாவிய தடுப்பூசி ஒதுக்கீட்டு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ஒரு பில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும். “வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நடவடிக்கைக்கு போதுமான போக்குவரத்து வசதிகள் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்,” என்று யூனிசெஃப் விநியோகிப்புப் பிரிவின் இயக்குநர் எட்லெவா காடிலி தெரிவித்தார்.
கொவிட்-19 பரவல் காரணமாக அதிக ஆபத்துகளை எதிர்நோக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்வதே கோவாக்ஸ் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அண்மைய ‘ஜி20’ உச்சநிலை மாநாட்டிலும் அதில் பங்கேற்ற உலகின் ஆகப்பெரிய பொருளியல் நாடுகளின் தலைவர்கள், ஏழை நாடுகளை உள்ளடக்கி அனைத்து நாடுகளுக்கும் சரிசமமாக தடுப்பூசிகளை விநியோகிக்க உறுதி கூறினர்.
“கொள்ளை நோய் பரவுவதற்கு முன்பே தடுப்பூசிகளை சமமாக விநியோகிக்கும் ஏற்பாடு எதுவும் இல்லை. இதனால் மோசமான நோய், மரணம், உடல் ஊனம் போன்றவற்றிலிருந்து மில்லியன் கணக்கான குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது,” என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
“கொவிட்-19 தடுப்பூசிகள், முன்கள ஊழியர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் ஆகியவற்றை விநியோகிக்க தயாராவதற்கு முன்பு அனைவரது ஒத்துழைப்பு தேவைப் படுவதாக யூனிசெஃப்பின் காடிலி கூறினார்.
யூனிசெஃப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் உலகிலேயே அதிக அளவு தடுப்பூசிகள் வாங்கப் படுகின்றன. ஏறக்குறைய 100 நாடுகளின் சார்பில் வழக்கமான நோய்த் தடுப்பு மற்றும் நோய்ப் பரவலுக்கு எதிராக இரண்டு பில்லியன் தடுப்பூசிகளை அது ஆண்டு தோறும் வாங்கி வருகிறது.
இதற்கிடையே கொவிட்-19 தடுப்பூசிகளை உருவாக்க பாடுபட்டு வரும் பல்வேறு மருந்து தயாரிப்பு மற்றும் ஆய்வு நிலையங்கள் இறுதிக் கட்ட சோதனைகளை நடத்தி வருவதால் அடுத்த சில மாதங் களில் தடுப்பூசிகள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.