அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் 2021 ஜனவரி மாதம் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
தற்போதைய அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த வேளையில், இப்போது அமெரிக்க ஆட்சி அதிகாரத்தை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கு முறையாக மாற்றம் செய்வதற்கு இன்று சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதிகார மாற்றத்தை மேற்கொள்ளும் பொதுச் சேவை நிர்வாக அமைப்பு, திரு ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்திருந்தது.
தேசிய பாதுகாப்பு உள்பட முக்கிய துறைகளின் நிர்வாக பொறுப்புகளை பைடனிடம் ஒப்படைக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், “ நாட்டின் நலனை கருத்தில் கொண்டு எமிலி மெர்பி மற்றும் அவரது அமைப்பினர் அதிகார மாற்றத்திற்குத் தேவையான முதல்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். எனது குழுவையும் அதிகார மாற்றத்திற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்,” என்றார்.