கத்தாரில் உள்ள டோஹா விமான நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் பச்சிளங்குழந்தை ஒன்று கைவிடப்பட்டது.
இதையடுத்து விமான நிலையத்திலிருந்த பெண் பயணிகள் முழு உடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்தச் சோதனையில் ஆஸ்திரேலிய பெண்கள் அதிகமானோர் பாதிக்கப்பட்டதால் கத்தார்-ஆஸ்திரேலிய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கைவிடப்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் அறிவித்துள்ளது.
ஆசிய நாட்டைச் சேர்ந்த அந்தத் தாயாரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அது கூறியது.
குழந்தையை கைவிட்ட தாயார் தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
அந்தத் தாயார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் முழு உடல் சோதனைக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கத்தார் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆனால் அவர்கள் மீது எத்தகைய குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
கடந்த அக்டோபர் மாதம் விமான நிலையத்தில் உள்ள குளியல் அறையின் குப்பைத் தொட்டியில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.
பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட குழந்தை உயிரோடு மீட்கப்பட்டது.
இதையடுத்து ஹமாட் அனைத்துலக விமான நிலையத்தை தற்காலிகமாக மூடிய அதிகாரிகள் குழந்தையின் தாயாருக்கு வலைவீசினர்.
அப்போது விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த கத்தார் ஏர்ேவஸ் விமானம் நிறுத்தப்பட்டு அதில் ஏறவிருந்த பெண்கள் தனியாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியர்கள். அவர்கள் அனைவரும் முழு உடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அது மட்டுமல்லாமல் அவர்களில் யாருக்காவது குழந்தை பிறந்ததா என்பதைக் கண்டறிய மருத்துவ சோதனையும் நடத்தப்பட்டது.
இதில் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை பற்றி தற்போது ஊடகங்களில் கிளப்பியிருப்பதால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதில் கத்தார் உடனடியாக மன்னிப்பு கேட்காததால் ஆஸ்திரேலியா ஆத்திரமடைந்துள்ளது. இதையடுத்து இரு தரப்பு உறவு மோசமடைந்துள்ளது.