அம்னோ தலைவர்: பிரதமர் முகைதீன் யாசினுக்கு நெருக்குதல் தர வேண்டாம்

அம்னோ தலைவர்: பிரதமர் முகைதீன் யாசினுக்கு நெருக்குதல் தர வேண்டாம்

2 mins read
e9a24b95-4ea0-4411-b271-2d13f4e178f6
மீண்டும் மலேசிய துணைப் பிரதமர் பதவியை ஒதுக்கி, அந்தப் பொறுப்பை அம்னோ கட்சியிடம் தர வேண்டும் என பிரதமர் முகைதீன் யாசினுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டாம் என்று அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி, கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். படம்: பெர்னாமா -

மீண்டும் மலேசிய துணைப் பிரதமர் பதவியை ஒதுக்கி, அந்தப் பொறுப்பை அம்னோ கட்சியிடம் தர வேண்டும் என பிரதமர் முகைதீன் யாசினுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டாம் என்று அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி, கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

துணைப் பிரதமர், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் முதலிய பொறுப்புகளுக்கு யாரை நியமிப்பது என்பது பிரதமரின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகும் என்று குறிப்பிட்ட திரு ஸாஹிட், அதன் தொடர்பில் பொதுவெளியில் கருத்துகளையும் ஆருடங்களையும் வெளியிடுவது சரியல்ல என்றார்.

ஆனால், துணைப் பிரதமர் பொறுப்பு குறித்து கட்சிக் கூட்டங்களில் பேசப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.

"எந்தக் கட்சியும் கோரிக்கையை முன்வைக்கலாம். ஆனால், அழுத்தம் தரக்கூடாது. ஏனெனில், பிரதமருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை நாம் மதித்து நடக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

பேராக் மாநிலம், ஹுத்தான் மெலிந்தாங் படகுத் துறைமுகப் பகுதியில் குடியிருப்பாளர்களுடன் நேற்று காலை உணவருந்திய பின்னர், கட்சியில் உள்ள அனைவருக்கும் அந்த நினைவூட்டலை திரு ஸாஹிட் முன்வைத்தார்.

முன்னதாக, உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அளித்திருந்த பேட்டியில், மக்களவையில் 2021 வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நிறைவுபெற்ற பின்னர், அம்னோவிற்கு துணைப் பிரதமர் பொறுப்பை வழங்குவது குறித்து பேசப்படும் எனக் கூறி இருந்தார்.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில், அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்னோவை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில், அமைச்சரவையில் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் மூத்த அமைச்சர் என்ற பொறுப்பைத் தவிர, அக்கட்சிக்கு வேறெந்த முதன்மை பொறுப்பும் வழங்கப்படவில்லை என திரு இஸ்மாயில் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, தனது நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவரையும் துணைப் பிரதமர் பதவிக்கு முன்மொழிவது குறித்து அம்னோ முடிவெடுத்ததே இல்லை என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகமது ரஸ்லான் ரஃபீ கூறியிருந்தார்.

துணைப் பிரதமராக ஒருவரை அம்னோ முன்மொழிய, பிரதமர் முகைதீன் காத்திருந்ததாக செய்தித் தளம் ஒன்றில் வெளிவந்திருந்த தகவல் உண்மையல்ல என்று அவர் சொல்லியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்