தன் மகனை 28 ஆண்டு காலமாக வீட்டிற்குள் பூட்டி வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 70 வயது மூதாட்டி ஒருவரை சுவீடன் போலிசார் கைது செய்துள்ளனர்.
இப்போது 41 வயதாகும் அந்த ஆடவரின் உடலில் மோசமான காயங்கள் காணப்பட்டதாகவும் அவர் தனது பற்களை இழந்திருந்ததாகவும் போலிஸ் தெரிவித்தது. சுவீடனின் ஸ்டாக்ஹோமின் புறநகர்ப்பகுதியில் உள்ள ஹனிங்கே என்னும் இடத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடவரைக் கண்டதாகவும் அவரின் நிலை படுமோசமாக உள்ளதாகவும் பெண் ஒருவர் போலிசுக்குத் தகவல் தெரிவித்தார். அதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்து வந்த போலிசார் அந்த ஆடவரைக் காப்பாற்றினர். பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத நிலையில் கெட்ட நாற்றமடிக்கும் அந்த வீட்டில் அந்த ஆடவர் அடைத்துவைக்கப்பட்டிருந்தார். 11 வயதுச் சிறுவனாக இருந்தபோது அவனது பள்ளிப் படிப்பை நிறுத்திய அவனது தாய், 28 ஆண்டுகளாக அவனை வீட்டில் சிறை வைத்திருக்கிறார் என முதல் கட்ட விசாரணையில் தெரிகிறது.