ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு ஆர்வலர் ஜோஷுவா வோங், அவருடன் சேர்ந்து கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் இருவர் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஹாங்காங்கின் போலிஸ் தலைமையகத்துக்கு வெளியே நடந்த போராட்டத்தின் தொடர்பில் 24 வயது வோங், 23 வயது ஏக்ச்னஸ் சோ, 26 வயது ஐவன் லாம் ஆகியோருக்கு நேற்று தண்டனை விதிக்கப்பட்டது.
சட்ட விரோத கூட்டம் உட்பட பல குற்றச்சாட்டுகளை அம்மூவரும் ஒப்புக்கொண்டனர். தண்டனை விதித்த பிறகு வெளியேறிய வோங், “அடுத்து வரும் நாட்கள் சிரமமானதாக இருக்கும், ஆனால் நாங்கள் சமாளிப்போம்,” என்று சத்தமிட்டபடி சென்றார்.
வோங்குக்கு 13.5 மாதங்களும் சோவுக்கு 10 மாதங்களும் லாமுக்கு 7 மாதங்களும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்புக்குப் பிறகு, “இது போராட்டத்தின் முடிவல்ல,” என வோங் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாகக் கூறப்பட்டது.
கடந்த ஆண்டு சுமார் 7 மாதங்களாக ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. அதில் மில்லியன் கணக்கானவர்கள் பங்கேற்றதுடன் வன்முறைகளும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.