காத்திருந்து, பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என்பதைக் கண்காணித்து, தடுப்பு மருந்து வாங்க மலேசியா எண்ணம்

1 mins read
e62dd6e1-2999-41bb-8423-a0ec316c8b8e
படம்: இபிஏ -

கொவிட்-19 தடுப்பு மருந்தை வாங்குவதன் தொடர்பில் காத்திருந்து, கண்காணித்து பின்னர் வாங்கும் அணுகுமுறையைக் கையாள இருக்கிறது மலேசியா.

ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பு மருந்தை பிரிட்டன் பயன்படுத்துவதைக் கண்காணிக்க இருப்பதாக மலேசியாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் அந்த மருந்து பயன்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட மலேசிய சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா, அவசரநிலை கருதி அந்த மருந்தின் பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.

தடுப்பு மருந்துக்காக பதிவு செய்யும் அதே வேளையில், மற்ற நாடுகளில் அந்த மருந்தின் திறன், பக்கவிளைவுகள் போன்றவற்றைப் பற்றி கண்காணிக்க இருப்பதாக மலேசியா தெரிவித்துள்ளது.

அந்த தடுப்பு மருந்தைப் பயன்படுத்தி மூன்று மாதங்களில் கடுமையான பக்கவிளைவுகள் இல்லாதது உறுதியானால் அந்த மருந்தைப் பயன்படுத்த மலேசியாவுக்கு அது ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றார் திரு நூர் ஹிஷாம்.

மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே தடுப்பு மருந்தை வாங்குவது பற்றி மலேசியா முடிவெடுக்கும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்