பிப்ரவரி மாதத்திற்குள் அமெரிக்கர்கள் 100 மில்லியன் பேருக்கு கொரோனா கிருமிக்கு எதிராகத் தடுப்பூசி மருந்து செலுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. 'ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்' என்ற அரசாங்க-தனியார் பங்காளித்துவ அமைப்பு இதனை நேற்று முன்தினம் தெரிவித்தது.
அமெரிக்காவில் உள்ள பெரியவர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 40% இது என்று கூறப்படுகிறது. 'ஃபைசர்' மற்றும் 'மொடர்னா' தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டால், இன்னும் சில வாரங்களில் 100 மில்லியன் இலக்கை நோக்கிச் செல்லும் பயணம் தொடங்கிவிடும் என்று நம்பப்படுகிறது. முதியவர்கள், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் போன்ற அபாயநிலையில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தோரின் ஒரு நாள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 3,157ஐ எட்டியது. ஏப்ரல் 15ஆம் தேதியன்று 2,603 உயிரிழப்புகள் பதிவானதே இதுவரை ஆக அதிக எண்ணிக்கையாக இருந்து வந்த நிலையில், புதன்கிழமையன்று உறுதிசெய்யப்பட்ட உயிரிழப்புகள், அதைவிட 20% அதிகமாக உள்ளது. கிருமித்தொற்று தாக்கத்தால் ஆதரவு தர முடியாமல் அந்நாட்டு சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புகளும் திணறுகின்றன.
இதுவரை, அமெரிக்காவில் பதிவான கிருமி உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தது 273,799 ஆக உள்ளது. 13.9 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு கிருமி தொற்றியுள்ளதாக ஜான் ஹப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் விடுமுறைக் காலத்தில் அனைவரும் ஒன்றுகூடுவதாலும் குளிர்காலத்தால் மக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடப்பதாலும் கிருமித்தொற்று சம்பவங்களும் உயிரிழப்புகளும் மேலும் அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே அமெரிக்காவில் ஒரு நாளில் பதிவாகும் கிருமித்தொற்று சம்பவங்களைவிட அடுத்த நாள் பதிவாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆக அதிகமான உயிரிழப்புகள் பதிவான அதே நாளன்று, மருத்துவமனைகளில் கிருமித்தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கையும் 100,000ஐ தாண்டிவிட்டதாக 'கொவிட் டிராக்கிங் புரோஜெக்ட்' தரவுகள் தெரிவித்துள்ளன. நவம்பர் 10 முதல் மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவமனைகளுக்கு மேலும் அழுத்தத்தைத் தரும் என்று அஞ்சப்படுகிறது.
911 அவசரத் தொடர்புக் கட்டமைப்பு, 'நெருக்கடி நிலையில்' இருப்பதாக நாட்டின் மருத்துவ வண்டிச் சேவைகளைப் பிரதிநிதிக்கும் அமெரிக்க ஆம்புலன்ஸ் கழகம் நேற்று முன்தினம் தெரிவித்தது. இதற்கிடையே வரும் நாட்களில் மருத்துவமனைகளின் நிலைமை மேம்படுவதாகத் தெரியவில்லை என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு மையம் முன்னுரைத்துள்ளது.

