கோலாலம்பூர்: பேராக்கில் புதிய ஆட்சியை அமைக்க அம்னோ தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது.
இதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படவும் தயாராக இருப்பதாக அது அறிவித்து உள்ளது.
பேராக்கில் எதிர்த்தரப்பைச் சேர்ந்த பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் ஆட்சிக்குத் திரும்ப அனுமதிக்கக்கூடாது என்று அம்னோவின் நட்புக்கட்சியான பாஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
ஆனால் எதிர்க்கட்சிகளுடன் கூட்டுச் சேர தயாராக இருப்பதாக அம்னோ கூறியுள்ளது.
பேராக் விவகாரத்தில் மலேசியாவை ஆளும் கூட்டணிக் கட்சி களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் ஏற்கெனவே ஆட்டம் கண்டிருக்கும் பிரதமர் முஹைதீன் தலைமையிலான ஆட்சிக்கு பாதிப்பு ஏற்டலாம் என அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று காணொளி வழியாக நடைபெற்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால் பேராக் முதல்வரும் பெர்சத்துக் கட்சியின் துணைத் தலைவருமான ஃபைசல் அசுமுவின் ஆட்சி கவிழ்ந்தது.
இதற்கு அம்னோ முக்கிய காரணமாக இருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் நேற்று செய்தி யாளர்களிடம் பேசிய அம்னோ தலைவர் ஸாஹித் ஹமிடி, தற்போதைய கூட்டணி தொடர முயற்சி எடுக்கப்படும் என்றார்.
"எல்லாமே சாத்தியம். தற்போதைய கூட்டணியைத் தொடர முயற்சி செய்வோம்.
"ஆனால் நிலைமை மாறினால் அதற்கு ஏற்ற சூழ்நிலையை உறுதி செய்வோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஆனால் பேராக்கில் புதிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் பங்கேற்கமாட்டோம் என்று பாஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதே போல பெர்சத்துக் கட்சியும் இதிலிருந்து ஒதுங்கியிருக்க முடிவு செய்துள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டிய அகமது ஸாஹிட் ஹமிடி, பேராக்கில் வலுவான அரசாங்கத்திற்கு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதைத் தவிர வேறு வழி யில்லை என்றார்.

