மலேசிய மக்களுக்குத் தேவையான அளவு கொவிட்-19 தடுப்பூசி மருந்து கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று அந்நாட்டு அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதின் கூறியுள்ளார்.
தடுப்பூசிகளைத் தயாரித்து வரும் ஃபைசர் நிறுவனம் இவ்வாண்டுக்கான உற்பத்தி இலக்கை குறைத்துள்ளது. இதனால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சரான கைரி ஜமாலுதின், ஃபைசர் நிறுவனத்திற்கு தடுப்பூசி மருந்துகளை விநியோகிப்பதில் இந்த ஆண்டு மட்டும்தான் பிரச்சினை இருக்கும் என்று தெளிவுபடுத்தினார்.
அடுத்த ஆண்டு தடுப்பூசி மருந்துகளை விநியோகிப்பதில் பிரச்சினை இருக்காது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதே சமயத்தில் கொவிட்-19 தடுப்பூசிகளுக்காக ஒரு சில நிறுவனங்களை மட்டுமே மலேசியா நம்பியில்லை என்றும் அவர் சொன்னார்.
"அண்மையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் 'ஃபைசர்-பயோ என்டெக்' இணைந்து விநியோகிக்கும் தடுப்பூசிகளில் 20 விழுக்காடு மலேசியாவுக்கு கிடைக்கவிருக்கிறது.
"விநியோகிப்புப் பிரச்சினைகளால் அடுத்த ஆண்டு தனது நிறுவனத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படாது என்று ஃபைசர் நிறுவனம் எங்களிடம் தெரிவித்துள்ளது.
"அப்படியே தடுப்பூசிகளை விநியோகிப்பதில் பிரச்சினையிருந்தாலும் மற்ற நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகளைத் தருவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்று அமைச்சர் கைரி குறிப்பிட்டார்.
மலேசியர்களுக்கு தடுப்பூசிகளைத் தருவிப்பதில் கடைசிகட்ட பிரச்சினைகள் ஏற்பட்டால் அரசாங்கம் என்ன செய்யும் என்று பக்கத்தான் ஹரப்பான் உறுப்பினர் ஃபஹ்மி ஃபட்சில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கைரி பதிலளித்தபோது இதனைத் தெரிவித்தார்.


