ஹாங்காங்: ஹாங்காங்கில் கொவிட்-19 மூன்றாவது அலை உச்சக்கட்டத்தை எட்டியிருந்தாலும் வெளியே சென்று வீடு திரும்புவதற்கு பாதுகாப்பான சூழல் நிலவுகிறது. தற்போதைய இதமான பருவநிலையை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்கள் ஆண்டுஇறுதி விழா காலத்துக்கும் தயாராகி வருகின்றனர். ஆனால் தலைமை நிர்வாகி கேரி லாம் கிருமித்தொற்று பரவலைக் குறித்து எச்சரித்துள்ளார். புதிய தீவிரமான கட்டுப்பாடுகள் அமலாக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
நவம்பர் மாதம் கடைசி இரண்டு வாரங்களில் கிருமித்தொற்று மீண்டும் தலைதூக்கியது. இந்த அலையில் இளம் நோயாளிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கேரி லாம் தெரிவித்தார்.
"முந்தைய அலையில் கிருமித்தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்காக இருந்தது. தற்போது இது 36க்கு அதிகரித்துள்ளது.
"நாற்பது பேருக்கு மேல் மோசமான உடல்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன," என்று அவர் கூறினார்.
"தீவிர சிகிச்சை பெற்று வரு பவர்களில் ஆறு பேர் 60 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள். இருவர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள். மோசமான உடல்நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒன்பது பேர் அறுபது வயதுக்கும் இருவர் 50 வயதுக்கும் உட்பட்டவர்கள்.
"கடந்த கொவிட்-19 அலையால் மோசமாக, தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முதியோர்கள்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் தொடர்புகளின் தடங்களைக் கண்டறிய முடியாத சம்பவங்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு," என்று அவர் குறிப்பிட்டார்.
இதனால் புதிய கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மனதளவில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப் படுத்துவதே முதல் நடவடிக்கையாக இருக்கும் என்றார் அவர்.
இதற்கிடையே உணவு, சுகாதார துறை நேற்று புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது. மாலை 6.00 மணி முதல் மறுநாள் காலை 4.53 வரை உணவகங்களில் உணவருந்த அனுமதியில்லை.
மற்ற நேரங்களில் மேசைக்கு இருவர் மட்டுமே உணவருந்தலாம். புதிய கட்டுப்பாடுகள் இம்மாதம் 10ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

