ஃபைசர் நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பூசியை அமெரிக்காவில் அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ள கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி 95% பயன் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபைசர் நிறுவன தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த முதல் நாடாக பிரிட்டன் உள்ளது. பிரிட்டனில் இந்த மருந்து முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கும், முதியோருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
பிரிட்டனைத் தொடர்ந்து, பஹ்ரைன், கனடா போன்ற நாடுகளும் அந்த மருந்து பயன்பாட்டுக்கு அனுமதி அளித்தன.
அமெரிக்காவில் ஃபைசர் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கான அனுமதி பெற அந்நாட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பிடம் (எப்டிஏ) விண்ணப்பிக்கப்பட்டது.
மருந்தின் செயல்திறம், பரிசோதனை முடிவுகள் போன்றவற்றை ஆராய்ந்த அவ்வமைப்பின் நிபுணர் குழு, இந்த தடுப்பு மருந்தை அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்த அங்கீகாரம் அளிக்கலாம் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதையடுத்து, ஃபைசர் தடுப்பூசியை அமெரிக்காவில் பயன்படுத்த சில நாட்களுக்குள் அங்கீகாரம் கிடைக்கும் என்றும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி போடும் முதற்கட்ட பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.