அமெரிக்காவின் லாஸ் வேகஸ் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் விமானம் ஒன்றின் இறக்கையின் மீது ஆடவர் ஒருவர் ஏறியதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
லாஸ் வேகஸ் நகரிலிருந்து போர்லாந்து நகருக்குச் செல்லவிருந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம், பயணத்தைத் தொடங்கவிருந்தது. அந்தச் சமயத்தில் அந்தப் பகுதியின் தடுப்புவேலியைத் தாண்டி விமானத்தை நோக்கி ஒருவர் வருவதை அறிந்த விமானி, விமானக் கட்டுப்பாட்டு கோபுரத்திடம் அதுகுறித்து தெரியப்படுத்தினார்.
அதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார், அந்த ஆடவரைக் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
விமானத்தில் இருந்த பயணி ஒருவர் இந்தச் சம்பவத்தைக் காணொளி எடுத்தார். அதில், அந்த ஆடவர் விமானத்தின் இறக்கைப் பகுதியில் ஏறி நடப்பதும் அதில் அமர்ந்து இருந்ததும் தெரிந்தது. அவரை போலிசார் நெருங்கியபோது அந்த ஆடவர் விமானத்தின் இறக்கையிலிருந்து சரிந்து கீழே விழுந்தார்.
அதிகாரிகள் அவரைக் கைது செய்த பிறகு அந்த விமானம் முழுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தால் அந்த விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரம் தாமதமானது.