சோல்: தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் மோசமடைந்து வருகிறது. அந்நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வரும் வேளையில், மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை நிலவுகிறது.
தென்கொரியாவில் மேலும் 1,053 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக கொரிய நோய்க்
கட்டுப்பாட்டு, தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களாக அன்றாடப் பாதிப்பு 1,000க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதுவரை மொத்தம் 48,570 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 659 பேர் மாண்டுவிட்டனர். கொரோனா கிருமித்தொற்றால் தென்கொரியா முதலில் பாதிப்புக்குள்ளானபோது கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண தென்கொரிய அதிகாரிகள் மும்முரம் காட்டியதால் கைமீறி போகவிருந்த நிலை
கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அண்மையில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மருத்துவ மனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை
அடுத்து, மொத்த படுக்கைகளில் ஒரு விழுக்காடு படுக்கைகளை கொவிட்-19 நோயாளிகளுக்கு ஒதுக்கிவைக்குமாறு பிரதான பொது மருத்துவமனைகளுக்கும் தேசிய பல்கலைக்கழக மருத்துவ
மனைகளுக்கும் தென்கொரிய சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

