மாண்டரின் ஆர்ச்சர்ட் சிங்கப்பூர் ஹோட்டல் ஊழியர்களில் மேலும் எட்டு பேருக்கு நடத்தப்பட்ட 'செரோலஜி' பரிசோதனைகளின் மூலம் அவர்களுக்குத் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
அநேகமாக அந்த ஊழியர்களுக்கு முன்பு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்தது. மூன்று பேருக்கு தொற்று இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
மொத்தம் 11 பேருக்கும் தொற்று ஏற்பட்டதன் தொடர்பில் புலன்விசாரணை நடந்து வருகிறது என்று அமைச்சு குறிப்பிட்டது.
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த 11 பேருடன் அணுக்கமாகத் தொடர்புகொண்டு இருந்தவர்களையும் அமைச்சு சோதித்து, அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை கண்டறிந்து வருகிறது.
புதிதாக கொவிட்-19 எத்தனை பேருக்குத் தொற்றுகிறது என்பது பற்றி நாள்தோறும் சுகாதார அமைச்சு அறிவித்து வருகிறது.
அந்த எண்ணிக்கையில் அந்த 11 பேரும் உள்ளடக்கப்படவில்லை. அவர்களிடம் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் தொற்று இல்லை என்று காட்டின.
இதை வைத்துப் பார்க்கையில் அவர்களுக்கு ஏற்கெனவே கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருக்கலாம். இப்போது தொற்று இல்லை என்பது தெரிகிறது.

