அமெரிக்காவில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கலிஃபோர்னியாவைத் தொடர்ந்து, டென்னசி மாநிலமும் கொரோனா பரவல் மையமாக உருவெடுத்துள்ளது.
வேறு எந்த அமெரிக்க மாநிலத்திலும் இல்லாத வகையில், டென்னசியில் கடந்த ஏழு நாள்களில் சராசரியாக நூறாயிரம் பேரில் 128 பேரை கொரோனா தொற்றிவிட்டது என்று அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையத் தரவுகள் கூறுகின்றன. கலிஃபோர்னியாவில் இவ்விகிதம் நூறாயிரம் பேருக்கு 111 புதிய தொற்றுச் சம்பவங்கள் எனப் பதிவாகியுள்ளன.
நன்றி தெரிவிக்கும் நாள் கொண்டாட்டத்திற்காக அமெரிக்கர்கள் அதிகளவில் பயணம் செய்ததும் ஒன்றுகூடியதுமே அண்மைய தொற்று அதிகரிப்பிற்குக் காரணம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
அமெரிக்காவின் 31 மாநிலங்களில் இம்மாதத்தில் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அத்தொற்றால் உயிரிழப்பு நிகழ்வதும் அதிகரித்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் அந்நாட்டில் 194,000க்கும் மேற்பட்டோர் புதிதாகக் கிருமித்தொற்றுக்கு உள்ளாகினர்.
இதனிடையே, நேற்று காலை நிலவரப்படி, ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாக நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம் கூறியது.
அடுத்த ஆண்டு ஜூலைக்குள் கூடுதலாக 100 மில்லியன் தடுப்பூசிகளை விநியோகிக்கும் வகையில் ஃபைசர் நிறுவனத்துடன் $2 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தை அந்நாட்டு அரசு செய்துகொண்டுள்ளது.
இதற்கிடையே, திட்டமிட்டபடி தடுப்பூசி போடும் பணிகள் நடந்தால் அடுத்த கோடைக் காலத்தில் அமெரிக்காவில் இயல்புநிலை திரும்ப வாய்ப்புள்ளதாக முன்னணி நோய்த்தொற்றியல் வல்லுநர் ஆன்டனி ஃபௌசி தெரிவித்துள்ளார்.
தாதிமை இல்லவாசிகள், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், அத்தியாவசியப் பணியாளர்கள், முதியவர்கள், எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் போன்றோருக்கு 2021 மார்ச், ஏப்ரல் மாதவாக்கில் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று டாக்டர் ஃபௌசி நம்பிக்கை தெரிவித்தார்.
"எல்லாம் சரியாக நடந்தால், அடுத்த கோடைக் காலத்தின் முடிவில் 70% முதல் 85% மக்களுக்குத் தடுப்பூசி போட்டுவிட முடியும்," என்றார் அவர்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று, மொடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை டாக்டர் ஃபௌசி போட்டுக்கொண்டார்.

