கத்தாரிலும் துபாயிலும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்து வழங்கும் பணி நேற்று தொடங்கியது. முன்களப் பணியாளர்களுக்கும் முதியோருக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மற்ற வளைகுடா நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. குவைத்தில் இன்றும் ஓமானில் வரும் ஞாயிற்றுக்கிழமையும் ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று கூறப்பட்டது.
பஹ்ரைனில் சினோஃபார்ம் தடுப்பூசி போடும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அங்கு ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசி போடவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் மூன்று கட்டங்களாக ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசி போடும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
7 சிற்றரசுகளைக் கொண்ட ஐக்கிய அரபு சிற்றரசுகளில் அவசரகாலத்தில் போட ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கப்பட்டது. அதே நாளில் அங்கு தடுப்பூசிகள் வந்து சேர்ந்ததாகக் கூறப்பட்டது.
துபாயில் மூத்த குடிமகன் ஒருவருக்கும் தோஹாவில் 79 வயதான ஓய்வுபெற்ற பல்கலைக்கழக பேராசிரியருக்கும் முதலில் தடுப்பூசி போடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படவில்லை.
குடிமக்கள், 60 வயதுக்கு மேற்பட்ட நாட்பட்ட நோய் மற்றும் சிறப்புத் தேவையுள்ள குடியிருப்பாளர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.