பெய்ஜிங்: உலகில் ஆக அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் 35 பில்லியன் கிலோ உணவு தானியங்கள் வீணடிக்கப்படுவதாக அந்நாட்டின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சேமிப்பு, போக்குவரத்து, பதப்படுத்துதல் ஆகிய நிலைகளின்போது அந்தளவிற்கு தானியங்கள் வீணாவதாகக் கூறப்படுகிறது. காலாவதியான சேமிப்பிட வசதிகள், தளவாடச் சாதனங்கள், பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் போன்ற பல காரணங்களால் இப்படிப் பேரளவிற்கு தானிய இழப்பு ஏற்படுவதாக அந்தச் செய்தியறிக்கை குறிப்பிட்டுள்ளது. தேசிய மக்கள் காங்கிரஸ் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தானியங்களும் உணவுப்பொருள்களும் வீணடிக்கப்படுவதைக் குறைப்பது உணவுப் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது என்று அவ்வறிக்கை சுட்டியுள்ளது.
"போதுமான அளவு தானியம் கையிருப்பில் இருந்தாலும் நாட்டில் உணவுத் தேவைக்கும் வழங்கலுக்கும் இடையே ஓர் இறுக்கமான சமநிலை நிலவுகிறது," என்று அவ்வறிக்கை தெரிவித்துள்ளது. வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் செயல்திறன்மிக்க அறுவடை இயந்திரத்தை உருவாக்கவும் தானியம் வீணாகுவதைக் குறைக்கும் வகையில் விவேகமான கிடங்குகளை அமைக்கவும் தேசிய மக்கள் காங்கிரசின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. அத்துடன், சீன நகரங்களில் ஒவ்வோர் ஆண்டும் உணவு விநியோகத் துறையில் 18 பில்லியன் கிலோ வரை உணவுப்பொருள்கள் வீணாகுவதையும் அந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

