மூச்சுக் காற்றை ஆய்வு செய்து சில நிமிடங்களுக்குள் கொரோனா தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியும் விரைவு பரிசோதனையை இந்தோனீசியா அறிமுகப்படுத்த உள்ளது.
யோக்யகார்த்தாவில் இருக்கும் கட்ஜா மடா பல்கலைக்கழகத்தில் GeNose C19 எனும் அந்த மூச்சுக்காற்று ஆய்வு சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக் குழுவை வழிநடத்திய பேராசிரியர் குவாட் டிரையானா, முதலில் 100 அத்தகைய மூச்சுக்காற்று ஆய்வு சாதனங்கள் விநியோகிக்கப்படும் என்று கூறினார். அரசு அனுமதித்த பிறகு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற அதிகமானோரைப் பரிசோதிக்கும் இடங்களில் இந்தச் சாதனங்கள் வைக்கப்படும் என்றார் அவர்.
மூச்சுக்காற்று மாதிரிகளைச் சேகரிப்பது, பரிசோதிப்பது ஆகியவை உட்பட இந்தப் பரிசோதனைக்கு 3 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும். இந்தப் பரிசோதனைக்கு 15,000 முதல் 25,000 ரூபியா (S$1.40 முதல் S$2.35) வரை ஆகும்.
ஒவ்வொரு சாதனமும் நாள் ஒன்றுக்கு 120 பரிசோதனைகளைச் செய்யும் என்று பேராசிரியர் தெரிவித்தார். தினமும் 1.2 மில்லியன் மக்களுக்கு பரிசோதனைகள் செய்யும் விதத்தில் 10,000 சாதனங்களை உருவாக்குவது இலக்கு என்கிறது ஆய்வுக் குழு.

