கோலாலம்பூர்: ஜோகூரில் உள்ள கோத்தா திங்கி வட்டாரம் உள்ளிட்ட சில பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்று திங்கட்கிழமை முதல் நடப்புக்கு வருவதாக மலேசியாவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
புதிய ஆணைக்கு இணங்க கோத்தா திங்கி தலைமை காவல் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு உள்ளோர் இடமாற்றம் செய்யப்படுவர் என்றார் அவர்.
அந்தத் தலைமையகத்தில் விசாரணைக் கைதிகளாக 'லாக் அப்'பில் அடைக்கப்பட்டு உள்ள 171 பேரிடம் கிருமி பரிசோதனை நடத்தப்பட்டதில் 125 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஜோகூர் பாரு சீர்திருத்த மையத்திலும் பத்து 19 ஜாலான் உலு சோ-பொந்தியான் தொழிலாளர் தங்குமிடத்திலும் மேம்
படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக திரு இஸ்மாயில் சாப்ரி தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
புதிய கட்டுப்பாட்டு ஆணை ஜனவரி 10ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மலேசியாவில் நேற்று 1,196 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

