வாஷிங்டன்: இலியனாய் மாநில உருட்டுப்பந்து திடலில் நடந்த
துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்ததாகவும் மேலும் மூவர் காயமுற்றதாகவும் போலிஸ் தெரிவித்தது.
இச்சம்பவம் தொடர்பில் போலி சிடம் சிக்கிய சந்தேக நபர் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற டான் கார்ட்டர் லேன்ஸ் திடல் அருகே பொதுமக்கள் நெருங்க வேண்டாம் என ராக்ஃபர்ட் நகர போலிசார் டுவிட்டரில் கேட்டுக்கொண்டனர். சனிக்கிழமை பின்னிரவில் பதிவேற்றப்பட்ட அத்தகவலில் 37 வயது வெள்ளை இன ஆடவர் போலிசின் பிடியில் உள்ளதாகக் குறிப்பிட்டது.
துப்பாக்கிச்சூடு நடைபெற்றதும் அங்கு விரைந்து வந்த தலைமை போலிஸ் அதிகாரி டான் ஓஷே சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். விசாரணை நடைபெற்று வருவதால் யார், என்ன காரணம் என்ற விவரங்களுக்குப் பதிலளிக்க இயலவில்லை என்று அப்போது அவர் கூறினார். இருப்பினும் மூன்று பேர் மாண்டதை அவர் உறுதிப்படுத்தினார்.
காயமடைந்த மூவருக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுடப்பட்டவர்களில் இருவர் பதின்ம வயதினர் என்றார் அந்த அதிகாரி.
ராக்ஃபர்ட் நகர் சிகாகோவின் வடமேற்கே சுமார் 130 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
தாக்குதல் நடத்தியவருக்கு குறிப்பிட்ட நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் யாரையும் குறி வைத்து அவர் தாக்கியதாகவும் புலப்படவில்லை என்றும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

