டாக்கா: மேலும் ஒரு ரோஹிங்ய அகதிகள் குழுவை தொலைதூர தீவுக்கு இடமாற்றம் செய்ய பங்ளாதேஷ் முடிவெடுத்திருப்பதாக அந்நாட்டின் அதிகாரிகள் நேற்று கூறினர். அண்டைய மியன்மாரிலிருந்து அடைக்கலம் நாடி வந்தவர்களை வேறிடத்துக்கு மாற்றக்கூடாது என மனித உரிமைக் குழுக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு பங்ளாதேஷ் அரசாங்கம் செவிமடுக்கவில்லை.
முஸ்லிம் சிறுபான்மை மக்களான சுமார் ஆயிரம் ரோஹிங்ய குடிமக்கள் இன்னும் ஒருசில நாட்களில் வங்காள விரிகுடாவில் தொலைதூரத்தில் அமைந்துள்ள பாசான் சார் தீவுக்கு அனுப்பப்பட உள்ளதாக நம்பப்படுகிறது.
இம்மாதத் தொடக்கத்தில் ஏற்கெனவே 1,600 ரோஹிங்ய அகதிகளை பங்ளாதேஷ் இவ்வாறு இடமாற்றம் செய்ததாக அதுபற்றி நேரடியாக அறிந்த இரு அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
முதலில் சிட்டகாங் நகருக்கு அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். கடல் அலைகளின் வேகத்தைப் பொறுத்து பாசான் தீவுக்கு அவர்கள் மாற்றப்படுவார்கள் என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.
இதற்கிடையே, இடம் மாறிச் செல்ல விரும்புவோர் மட்டுமே தொலைதூர தீவுக்குக் கொண்டு செல்லப்படுவார்கள் என பங்ளாதேஷ் அரசாங்க அகதிகள் நிர்வாகப் பிரிவின் துணை அதிகாரி முகம்மது ஷம்சத் டௌஸா என்பவர் கூறினார்.

