தென்கொரியாவில் இதுவரை இல்லாத அளவாக திங்கட்கிழமை ஒரே நாளில் 40 பேர் கிருமித்தொற்றுக்கு பலியாகிவிட்டனர். கொள்ளைநோய் பரவ ஆரம்பித்தது முதல் இம்மாதம் 21ஆம் தேதியும் 22ஆம் தேதியும் தலா 24 பேர் மாண்டதே இதுவரை ஆக அதிகமான அன்றாட உயிரிழப்பாக இருந்தது. இதனை புதிய சம்பவம் முறியடித்துவிட்டதாக அதிகாரிகள் கூறினர்
இந்த 40 பேரையும் சேர்த்து இதுவரை அங்கு கிருமித்தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 859 ஆனது. மரணம் தவிர, புதிதாக கிருமித்தொற்றுக்கு ஆளானவர் எண்ணிக்கை நேற்று 1,046 என பதிவானது. இதனையும் சேர்த்து மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58,725 ஆக அதிகரித்தது. இதற்கிடையே தலை நகர் சோலில் உள்ள சிறைச்சாலை ஒன்று கிருமித்தொற்று குழுமமாக உருவெடுத்திருப்பது குறித்து பிரதமர் சுங் சை-கியுன் வருத்தம் தெரிவித்து உள்ளார். அங்கு கைதிகளாக உள்ளோரில் 757 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
குறிப்பாக, சோல் நகரில் இதுவரை 1,400 பேரிடம் தொற்று காணப்பட்டு உள்ளதால் அங்கு தற்காலிக கிருமிப் பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரு வாரங்களில் மட்டும் இந்த முகாம்களில் 500,000க்கும் மேற்பட்டவர்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த இந்த வாரம் தென்கொரியா புதிய நடவடிக்கைகளை அறிவித்தது. நான்கு பேருக்கு மேல் ஒன்றுகூடக் கூடாது என்பதும் அந்தப் புதிய கட்டுப்பாடுகளில் ஒன்று.

