போலி ஹலால் சின்னத்தை பயன்படுத்தியதாக ஜோகூரில் நிறுவன இயக்குநர்கள் மீது குற்றச்சாட்டுகள்

போலி ஹலால் சின்னத்தை பயன்படுத்தியதாக ஜோகூரில் நிறுவன இயக்குநர்கள் மீது குற்றச்சாட்டுகள்

2 mins read
f4aa924d-cfde-4843-94ac-428d71bf301c
படம்: ஏஎஃப்பி -

உறைய வைக்கப்பட்ட இறைச்சி நிறுவனம் ஒன்று போலியான ஹலால் சின்னத்தை தனது நிறுவன வாகனங்களில் பயன்படுத்தியதன் தொடர்பில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவர் தெற்கு ஜோகூரில் அமைந்துள்ள மலேசிய அமர்வு நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டனர்.

44 வயதான ரஹ்மான் ஷேக் அப்துல்லா, அவரது மனைவி ரைஹானா காசிம், 42 ஆகிய இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் மறுத்தனர்.

ரைஹானா கோல்ட் ஸ்டோரேஜ் எனும் அந்த நிறுவனம், உரிய அனுமதி இன்றி ஹலால் சின்னத்தை தனது லாரியில் பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இம்மாதம் முதல் தேதி பிற்பகல் 1 மணியளவில் ஜோகூர் பாருவின் ஹாலான் பெர்னிஆகான் செட்டியா 6 பகுதியில் அமைந்துள்ள அந்த நிறுவன வளாகத்தில் இந்தக் குற்றம் புரிந்ததாகக் கூறப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 200,000 ரிங்கிட் (S$65,554) வரையிலான அபராதம் விதிக்கப்படலாம். அதே குற்றத்தை மீண்டும் புரிந்தால் 500,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

அதே நேரத்தில் அதே வளாகத்தில் இன்னொரு லாரியிலும் அத்தகைய குற்றத்தை ரஹ்மானும் ரைஹானாவும் செய்தததாக இரண்டாவது குற்றச்சாட்டு குறிப்பிட்டது.

மலேசியாவில் ஒரு கும்பல், உறைய வைக்கப்பட்ட இறைச்சியை இறக்குமதி செய்து அதனை 'ஹலால்' சான்றிதழ் பெற்ற உணவு என விநியோகம் செய்வதாக அண்மையில் புகார் ஒன்று எழுந்தது.

ஆனால், இவ்விரு வழக்குகளும் வெவ்வேறானவை.

'ஹலால்' இறைச்சி மோசடி வழக்கின் தொடர்பில் அந்தக் கும்பலுக்கு எதிராக 13 போலிஸ் புகார்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இந்த மோசடி கடந்த 40 ஆண்டுகளாக நடப்பதாகக் கூறப்பட்டது. இறந்துபோன கங்காரு, குதிரை ஆகியவற்றின் இறைச்சியைக் கடத்தி வந்து ஹலால் சான்றுடன் மாட்டிறைச்சி என விற்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

அர்ஜென்டினா, பிரேசில், சீனா, உக்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து இறைச்சியை இறக்குமதி செய்து அதனை போலி ஹலால் லேபல்களுடன் பொட்டலம் செய்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியானதையடுத்து இத்தகைய மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

சுமார் 30 மில்லியன் மதிப்பிலான 2,500 டன் எடையுள்ள உறைய வைக்கப்பட்ட இறச்சி, போலி லேபல்கள், உட்பட பொருள்கள் ஜோகூரின் செனாயில் உள்ள சேமிப்புக்கிடங்கில் பறிமுதல் செய்யப்பட்டன.

குறிப்புச் சொற்கள்