குளிர்காலத்தில் சிக்கியுள்ள பிரிட்டன், அதிகளவில் தொற்றக்கூடிய ஆற்றல் கொண்ட புது வகை கொரோனா கிருமியுடன் போரிட்டுக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரஸெனிகா நிறுவனமும் உருவாக்கிய தடுப்பூசிக்கு பிரிட்டன் அதன் ஒப்புதலை வழங்கியுள்ளது.
அவசரகால விநியோகத்திற்கான ஒப்புதல் தடுப்பூசிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் இரு முறை அதைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதாகவும் ஆஸ்ட்ரஸெனிகா குறிப்பிட்டிருந்தது.
பிரிட்டன் 100 மில்லியன் முறை போடுவதற்குரிய தடுப்பூசி மருந்து அளவைக் கோரியுள்ளது.
எளிதில் தொற்றும் ஆற்றல், புதிதாக உருவெடுத்துள்ள கொரோனா கிருமி வகைக்கு உண்டு என்று அரசாங்கமும் விஞ்ஞானிகளும் கூறும் நிலையில், விமானப் பயணங்களையும் வர்த்தகச் செயல்பாடுகளையும் பல நாடுகள் முடக்கின.
புதிய கொரோனா கிருமி வகையின் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாக ஆஸ்ட்ரஸெனிகாவும் தடுப்பூசி உருவாக்கும் மற்ற நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. இருப்பினும், கிருமிக்கு எதிராக உருவாக்கப்பட்ட தங்களின் தடுப்பூசிகள் செயல்திறனுடையதாக இருக்கும் என்று அவை எதிர்பார்க்கின்றன. கிருமிக்கு எதிரான தடுப்பூசியின் ஒட்டுமொத்த செயல்திறன் 70.4% என்று கூறப்பட்டது.
தடுப்பூசிச் சோதனையின் இறுதிக்கட்ட முடிவுகளில் தெளிவு இல்லை என்று முன்னதாக ஆஸ்ட்ரஸெனிகா-ஆக்ஸ்ஃபர்ட் குழு மீது குறைகூறப்பட்டது. இதையடுத்து, தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதைக் குழுவினர் வரவேற்றுள்ளனர்.

