மலேசியாவின் பாகாங் மாநிலத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் புதிய கொவிட்-19 நோய்த் தொற்றுக் குழுமம் அடையாளம் காணப்பட்டது. அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தொற்று அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
டெம்போக் மெம்பகா கிருமித்தொற்றுக் குழுமம் பெந்தோங் மாவட்டத்தில் உள்ளது. இங்கு புதிதாக 282 தொற்று பதிவாகியுள்ளது. இது அந்த மாநிலத்தில் பதிவான மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கையான 288 உடன் ஒப்பிடும்போது 98 விழுக்காடாகும்.
டிசம்பர் 22ஆம் தேதி பாகாங் சிறைச்சாலையில் ஒருவருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெம்போக் மெம்பகா கிருமித்தொற்றுக் குழுமம் உருவானது. அதையடுத்து அங்கு 504 பேருக்கு கொவிட்-19 சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை சுகாதாரத்துறை தலைமை நிர்வாகி நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மலேசியாவில் நேற்று முந்தைய நாள் நிலவரப்படி 1,925 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் பாதி பேர் சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள். சிலாங்கூர் மாநிலத்தில் 747 புதிய கிருமித்தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக கோலாலம்பூரில் 360 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள பாகாங் மாநிலத்தில் 288 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.
"இப்போது, நாங்கள் 220 நோய்த்தொற்றுக் குழுமங்களைக் கண்காணித்து வருகிறோம். அவற்றில் 50 குழுமங்களில் நோய்த்தொற்றுப் பதிவு அதிகரித்துள்ளது," என டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.
மலேசியாவில் பதிவான புதிய தொற்று 1,925ஐயும் சேர்த்து அங்கு மொத்தம் 108,615 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இந்நோய்த்தொற்றுக்கு இருவர் பலியாயினர்.
மாண்ட இருவருக்கும் நாட்பட்ட சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. இவர்களையும் சேர்த்து கொரோனா பலி எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 21,443 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் 10 பேர் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள்.
117 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 55 பேருக்கு உயிர் மூச்சுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கொவிட்-19 சோதனைக் கட்டணத்தை ஒருமுகப்படுத்த வேண்டும் என்று அங்குள்ள நிறுவனங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளன.
மருந்தகங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டும் போக்கில் செயல்படுவதாக நிறுவனங்கள் புகார் கூறுகின்றன.

