ஏடன் விமான நிலையத்தில் நிகழ்ந்த தாக்குதல்களில் குறைந்தபட்சம் 26 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏமனில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவை உறுப்பினர்களை ஏற்றி வந்த விமானம் நேற்று (டிசம்பர் 30) தரையிறங்கிய சற்று நேரத்தில் தாக்குதல் நிகழ்ந்தது.
தாக்குதல் நிகழ்ந்த சில மணி நேரத்துக்குப் பிறகு, ஏடனின் மாஷெக் அதிபர் அரண்மனையில் இரண்டாவது வெடிப்புச் சத்தம் கேட்டது.
பிரதமர் மயீன் அப்துல்மாலிக் உட்பட அமைச்சரவை உறுப்பினர்கள், ஏமனுக்கான சவூதி அரேபிய தூதர், குடியிருப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
விமான நிலையத்தில் நிகழ்ந்த தாக்குதலில், ரியாத்திலிருந்து விமானம் வந்து தரையிறங்கியதும் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன் துப்பாக்கிச்சூடும் நிகழ்ந்தது.
இந்தத் தாக்குதலில் 50க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் ஏடன் சுகாதார அதிகாரி முகமது ரோபீட் குறிப்பிட்டார்.
தாக்குதல்களுக்கு யாரும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை. இரண்டாவது வெடிப்புச் சம்பவம் எதனால் நிகழ்ந்தது என்பது உட்பட வேறு தகவல் இல்லை.


