ஜோகூர் பாரு: மலேசியர்கள் கருணை அடிப்படையில் எல்லை தாண்டிய பயணங்களை மேற்கொள்ள சுகாதார நடைமுறைகளைத் தரநிலைப்படுத்த சிங்கப்பூருடன் மலேசியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள், கருணை அடிப்படையில் நாடு திரும்ப விரும்பினால் மேல்முறையீடு செய்ய வேண்டியுள்ளது.
"குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டு இருந்தாலோ மரணம் அடைந்தாலோ தனிப்பட்ட அடிப்பையில் தற்போது சுகாதார நடைமுறை இடம்பெறுகிறது.
"இந்த நடைமுறையைத் தரநிலைப்படுத்த நாங்கள் சிங்கப்பூருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்," என்று அமைச்சர் ஹிஷாமுதீன் நேற்று முன்தினம் கூறினார்.
சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மலேசியர்கள், அதற்கான சான்றிதழைக் காட்டும் பட்சத்தில் எதிர்காலத்தில் நாடு திரும்ப அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த திரு ஹிஷாமுதீன், இந்த விவகாரம் சுகாதார அமைச்சின் பார்வைக்குக்கீழ் வருவதாகச் சொன்னார்.
"சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி மருந்து மலேசியாவில் அங்கீகரிக்கப்படுகிறதா இல்லையா என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் வெளியுறவு அமைச்சிற்கு இல்லை.
"அதுகுறித்து சுகாதார அமைச்சு முடிவெடுக்கும். அதன் முடிவுக்கு நாங்கள் இணங்குவோம்," என்றார் அவர்.

