பாகிஸ்தானில் இந்து கோயில் தீயில் இடப்பட்டதை அடுத்து அந்நாட்டுப் போலிசார் குறைந்தது 31 பேரைக் கைது செய்திருக்கின்றனர். 'ஜாமியத் உலேமா இ இஸ்லாம்' என்ற அடிப்படைவாத இஸ்லாமியக் கட்சியின் ஆதரவாளர்கள் கும்பலாக இணைந்து இந்தக் கோயிலை இடித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்துக்கள் பலர் கராச்சியில் திரண்டு தங்களது வழிபாட்டுத் தலம் புனரமைக்கப்படவேண்டும் எனக்கோரி வருகின்றனர். கைபர் பக்துன்க்வா மாநிலத்திலுள்ள நகரமான காரக்கில் கடந்த புதன்கிழமை அந்த இந்து கோயில் இடிக்கப்பட்டது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் தொடர்பில் 31 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் போலிசார் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தூண்டியவராகக் கருதப்படும் 'மெளலானா ஷரிப்'பை கைது செய்வதற்காக அந்நாட்டுப் போலிசார் சோதனை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலைப் புதுப்பிப்பதற்காக இந்து சமூகத்தினர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி வாங்கியதை அடுத்து இந்தச் சம்பவம் நேர்ந்தது.

