ஹாங்காங் அரசை ஆட்சியில் இருந்து அகற்ற முயன்றதாகக் கூறி, அரசியல்வாதிகள், ஜனநாயக ஆதரவு ஆர்வலர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் நேற்று கைது செய்யப்பட்டனர். ஆறு மாதங்களுக்குமுன் இயற்றப்பட்ட, சர்ச்சைக்குரிய புதிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அந்தக் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றன.
கடந்த செப்டம்பரில் இடம்பெற இருந்த சட்டமன்றத் தேர்தலுக்கான எதிர்க்கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அதிகாரபூர்வமற்ற முறையில் அவர்கள் கூடியதாகச் சொல்லப்பட்டது. பின்னர் கொவிட்-19 பரவலைக் காரணம் காட்டி அந்தத் தேர்தல் 2021 செப்டம்பருக்குத் தள்ளிவைக்கப்பட்டது. அவர்களின் செயல்கள் ‘கீழறுக்கும்’ வகையில் இருந்தன என்று ஹாங்காங் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் சட்ட வல்லுநர் பென்னி டையும் ஒருவர். சட்ட மறுப்பு இயக்கத்திற்காக 2014ல் குற்றம் நிரூபிக்கப்பட்ட திரு டையின் எண்ணத்தில் உதித்ததுதான் கடந்த ஜூலையில் இடம்பெற்ற அதிகாரபூர்வமற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் தேர்தல் எனச் சொல்லப்பட்டது. அத்தேர்தல் ஏற்பாட்டாளர்களின் பொருளாளராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஜான் கிளேன்சி எனும் அமெரிக்க வழக்கறிஞரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அமெரிக்கா - சீனா இடையிலான மோதலை மேலும் அதிகரிக்கலாம்.
திரு கிளேன்சி பணியாற்றி வரும் சட்ட நிறுவனம்தான், புதிய சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்புடைய நூற்றுக்கணக்கான வழக்குகளைக் கையாண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, புதிய அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கஇருக்கும் ஜோ பைடன் அடுத்த வெளியுறவு அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ள ஆன்டனி பிளிங்கன், ஹாங்காங் கைது நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். “உலகளாவிய உரிமைகளுக்காகத் துணிச்சலுடன் குரல் கொடுத்து வருவோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பைடன் - ஹாரிஸ் அரசாங்கம் ஹாங்காங் மக்களுக்குத் துணை நிற்கும் என்றும் ஜனநாயகத்தின் மீதான சீனாவின் ஒடுக்குமுறையை எதிர்க்கும் என்றும் பிளிங்கன் அறிவித்துள்ளார். இந்த நிலையில், தனக்கு எதிராக கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுவோரைத் தடுப்பதற்குக் கைது நடவடிக்கை அவசியமான ஒன்று எனச் சீனா தெரிவித்து இருக்கிறது.