அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்டும் அதனுள் நுழைந்தும் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து, அவரை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சியினர் நெருக்குதல் அளித்து வருகின்றனர்.
துணை அதிபர் மைக் பென்சும் அமைச்சரவையும் அதிபர் பொறுப்பில் இருந்து டிரம்ப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காவிடில், டிரம்ப் தம் பதவிக்காலத்தில் செய்த குற்றம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான நடைமுறைகளைத் தொடங்க பிரதிநிதிகள் சபையின் நாயகர் நான்சி பெலோசியும் செனட் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஸ்கூமரும் அழைப்பு விடுத்துள்ளனர்.
அதிபர் டிரம்ப் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், "அதிபரின் அபாயகரமான, தேச விரோத நடவடிக்கைகளை அடுத்து அவர் உடனடியாகப் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்," என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்து, சான்றிதழ் வழங்கும் விழா கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. அப்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு திரண்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயல, போலிசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலிசார் தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.
இந்த வன்முறையின்போது நால்வர் பலியாகினர்; ஐம்பதுக்கும் மேற்பட்ட போலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். இந்நிலையில், காயமடைந்த அதிகாரிகளில் ஒருவரான பிரையன் சிக்னிக் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த வன்முறையை அடுத்து, கல்வியமைச்சர், போக்குவரத்து அமைச்சர் எனப் பலரும் தங்களது பதவியிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
அதேபோல, வன்முறையைக் கட்டுப்படுத்த தவறியதற்குப் பொறுப்பேற்று நாடாளுமன்ற போலிஸ் படையின் தலைவர் ஸ்டீவன் சண்டும் பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, அதிபர் டிரம்ப்பின் முடக்கப்பட்ட டுவிட்டர் பக்கம் 12 மணி நேரத்திற்குப் பின் செயல் பாட்டிற்கு வந்தது. அதைத் தொடர்ந்து காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்ட அதிபர் டிரம்ப், "இம்மாதம் 20ஆம் தேதி புதிய நிர்வாகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும். இப்போது என் கவனமெல்லாம் அந்த அதிகார மாற்றம் சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதில்தான். ஆற்றுப்படுத்துவதற்கும் இணக்கத்திற்குமான தருணம் இது," எனக் கூறியுள்ளார்.

