மலேசிய மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ரீனா முகம்மது ஹருனுக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் இவருக்கு நோய்த்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதே நாள் இரவு இவருக்குத் தொற்று உறுதியானதாக இவரது அலுவலகம் தெரிவித்தது.
"இச்சம்பவம் எவருக்கும் அசௌகரியத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருந்தால் அதற்காக அமைச்சர் மன்னிப்புக் கோருகிறார்," என்று இவரது அலுவலகம் கூறியது.
அமைச்சர் ரீனா பணியில் இல்லாத இந்தச் சமயத்தில் இவரது அமைச்சு வழக்கம்போல பணியைத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை தமக்கு நோய்த்தொற்று உறுதியானதாக பிரதமர் அலுவலக அமைச்சர் முஸ்தபா முகம்மது நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார்.
அவருக்குத் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறைந்தது இரு அமைச்சர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.
கொவிட்-19 தொற்று உறுதியான மூன்றாவது அமைச்சர் திருமதி ரீனா. கடந்த ஆண்டு அக்டோபரில் சமய விவகார அமைச்சர் ஸுல்கிஃப்லி முகம்மது அல் பக்ரிக்கு நோய்த்தொற்று உறுதியானது.
இந்நிலையில், மலேசிய அமைச்சரவையைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கொவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். அமைச்சர்கள் முஸ்தபா முகம்மது, ரீனா இருவருக்கும் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஆதம் பாபா கூறியுள்ளார். அதோடு தொற்றின் அபாயம் குறித்து அமைச்சின் மதிப்பீட்டின் அடிப்படையில் அமைச்சர்கள் தனித்திருக்க வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும். புத்ரா ஜெயா மாவட்ட சுகாதார அலுவலகம், அமைச்சர்களின் உடல் நிலையை மதிப்பீடு செய்யும் என்றும் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்தார்.

