25வது சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்தி டோனல்ட் டிரம்ப்பை அதிபர் பதவியிலிருந்து அகற்ற அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதை ஏற்க துணை அதிபர் மைக் பென்ஸ் மறுத்துவிட்டார். நாட்டின் நலன் கருதி டிரம்ப்பை அதிபர் பதவியிலிருந்து அகற்றப் போவதில்லை என்றார் அவர்.
மேலும் நாட்டின் அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு தாம் நடந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
25வது சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்தி டிரம்ப்பை அதிபர் பதவியிலிருந்து அகற்ற திரு பென்ஸ் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, வன்முறையைத் தூண்டி யதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது தொடர்பாக ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துவது உறுதியாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
“திரு பைடனின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அதிபர் டிரம்ப்பிடமிருந்தும் அவரது ஆதரவாளர்களிடமிருந்தும் எனக்கு நெருக்குதல்கள் ஏற்பட்டும், எனது அதிகாரத்தைப் நான் தவறான முறையில் பயன்படுத்தவில்லை. அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு நடந்துகொண்டேன்.
“அமெரிக்காவில் தற்போது மிகக் கடுமையான சூழல் நிலவுகிறது. இந்த நேரத்தில் பிரதிநிதித்துவ சபையில் சிலர் அரசியல் விளையாட்டுகளில் ஈடுபவதை என்னால் அனுமதிக்க முடியாது,” என்று சபாநாயகர் நேன்சி பெலோசிக்கு எழுதிய கடிதத்தில் திரு பென்ஸ் தெரிவித்தார்.