கொரோனா கிருமிப் பரவலைச் சமாளிப்பது, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் இன்னும் சிரமமாக இருக்கக்கூடும் என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
எளிதில் தொற்றக்கூடிய புதிய வகை கிருமி உலகளவில் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் அவசரகாலப் பிரிவுத் தலைவர் மைக் ரயன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பிரிட்டனிலும் தென்னாப்பிரிக்காவிலும் முதல்முறையாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்த புதுவகை கிருமி, தற்போது ஏறத்தாழ 50 நாடுகளில் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதையடுத்து பல ஐரோப்பிய நாடுகளில் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
நேற்று இரவு உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்ட அதன் ஆக அண்மைய அறிக்கையில், கடந்த வாரம் உலகம் முழுவதும் ஏறக்குறைய ஐந்து மில்லியன் பேருக்கு கிருமித்தொற்று உறுதியானதாக தெரிவித்தது. விடுமுறை காலத்தில் பலரும் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரிவர கடைப்பிடிக்காததால் தொற்று அதிகரித்து இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
“கிருமித்தொற்று நிலவரம் மேம்படுவதும் மோசமடைவதுமான இந்தப் போக்கு தொடருமோ என்ற கவலை எனக்கு ஏற்பட்டுள்ளது. இதில் நாம் இன்னமும் சிறப்பாக செய்ய வேண்டும்,” என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த மரியா வேன் கெர்கோவ் கூறினார்.
தற்போதைய தடுப்பூசிகளால் புதுவகை கிருமியைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போகலாம் என்ற அச்சமும் பலரிடையே எழுந்துள்ளது.