அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கிற்குத் தடை விதித்து இருப்பது சரியான முடிவு என்றாலும், அது ஆபத்தான முன்னுதாரணம் என டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டோர்சி கூறியுள்ளார்.
உலகளாவிய பொது உரையாடலைக் கட்டுப்படுத்துவதில் தனி நபருக்கு அல்லது தனி நிறுவனம் ஒன்றுக்கு உள்ள அதிகாரத்தை அது வெளிப்படுத்துவதாக அவர் சொன்னார்.
“ஒரு கணக்கைத் தடை செய்யும்போது வலுவான பின்விளைவுகள் ஏற்படுகின்றன. அதற்கு சில தெளிவான விதிவிலக்குகளும் உள்ளன. இருப்பினும் சமூக ஊடக கணக்குகளைத் தடை செய்வது, ஆரோக்கியமான உரையாடலை ஊக்குவிப்பதற்கான எங்கள் நோக்கம் தோல்வி அடைந்துள்ளதைக் குறிக்கிறது,” என்று டோர்சி கூறினார்.
கடந்த வாரம் திரு டிரம்ப், அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லும்படி தமது ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டு இருந்தார்.
பின்னர் அங்கு ஏற்பட்ட வன்முறைக்கு அவரே காரணம் என பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதனை அடுத்து டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் நிரந்தரமாகத் தடை செய்தது.